No results found

    நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்


    பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால் பெங்களூருவில் உள்ள பசவன்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த நந்தி கோவில் பசவன்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு ‘ஊதுகுழல் குன்று’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    பெங்களூருவில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. மலையில் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிகளை ஒட்டி சாலையும் உள்ளது. ஆலய கோபுரம் வரை வாகனங்கள் செல்ல முடியும்.

    முன் காலத்தில் இந்தப் பகுதி சுங்கனஹள்ளி என்று அழைக்கப்பட்டது. விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதியில் வேர்க் கடலை பயிரிடப்பட்டிருந்தது. ஒரு மாடு அந்த கடலைச் செடிகளை தின்று சேதப்படுத்தி வந்தது. அதனால் நஷ்டமடைந்த விவசாயிகள், ஒரு முறை தடியால் அந்த மாட்டை தாக்கினர்.

    அங்கேயே காலை மடக்கி அமர்ந்த அந்த மாடு, அப்படியே கல்லாக மாறிவிட்டது. அத்துடன் நில்லாமல் அந்த கல் சிலை வளரவும் தொடங்கியது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது ஒலித்த அசரீரியின் வாக்குப்படி, நந்தியின் காலடியில் கிடந்த திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் வைத்தனர். உடனடியாக நந்தி சிலை வளர்வது நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக அந்தப் பகுதி மக்கள் நந்திக்கு சிறிய கோவிலை அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்த கோவிலின் வரலாறு.

    திராவிடக் கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கருவறையில் பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரே கல்லில் இந்த சிலை காணப்படுகிறது. நந்தியின் பின்புறம் வாலின் அருகில் சிறிய அளவிலான கணபதியின் சிற்பம் இருக்கிறது.

    நந்தியின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறிய கருவறைக்குள், சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அனைத்து சிவன் கோவில்களிலும், சிவபெருமான் முகத்தை தரிசித்துக் கொண்டிருக்கும் நந்தி, இந்த ஆலயத்தில் மட்டும் ஈசனுக்கு தன்னுடைய முதுகைக் காட்டிக் கொண்டிருக் கிறது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடைபெறும் வேர்க்கடலை சந்தை மிகப் பிரபலமானது. தங்களுடைய நன்றிக் கடனாக விவசாயிகள் பலரும் நந்தியம் பெருமானுக்கு வேர்க்கடலையை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    Previous Next

    نموذج الاتصال